sabato 2 gennaio 2010

புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தவறாக வழி நடத்தி சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே

புலிகளின் தலைவரை கூட்டமைப்பினரே பிழையாக வழி நடத்தினார்கள்: சந்திரகாந்தன் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனையும், தமிழ் மக்களையும் தவறாக வழி நடத்தி அழிவுப் பாதைக்குக் கூட்டிச் சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிர்வாகக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கட்டடத்தை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

சந்திரகாந்தன் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

தமிழ் மக்களின் அழிவுக்கெல்லாம் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். பிரபாகரன் விட்ட தவறுகளைச் சுட்டிக் காட்டாமல் அவரை தவறான பாதைக்கு இட்டுச் சென்றவர்களும் இந்தக் கூட்டமைப்பினரே ஆவர். தமிழர்கள் சுயமாகச் சிந்தித்து செயற் பட முடியாத அளவுக்கு பிரபாகரன் எடுத்த முடிவுகளுக்கு இவர்களே பிரதான காரணமாக உள்ளனர். தமிழ் மக்களின் நலன்களை எண்ணிப் பார்க்காதவர்களின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் ஒரு போதும் நிற்கவே மாட்டார்கள்.

இவ்வைபவத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபை தவிசாளர் சிவகுணம், போரதீவுப் பிரதேச சபை தவிசாளர் ஸ்ரீதரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ். சுபைர் மற்றும் பி.பிரசாந்தன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Nessun commento:

Posta un commento