martedì 13 aprile 2010

இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்

தமிழர்கள் தோற்றுவிடவில்லை – இதழ் ஒன்றுக்கு உருத்திரகுமாரன் நேர்காணல்

[ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010, 07:25.49 AM GMT +05:30 ]

நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கத்தின் இணைப்பாளர் உருத்திரகுமாரன் அவர்கள் இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் இது. 2009 மே 17ன் பின்னரான தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணம், புதிதாய் பிறப்பெடுத்திருக்கும் நாடு கடந்த அரச உருவாக்கம், கே.பி மற்றும் உருத்திரகுமாரன் மீதான தனிமனித வசைபாடல்கள் என பல்வேறு வினாக்களோடும் பயணிக்கிறது இச் சிறப்பு நேர்காணல்.

கேள்வி:  2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

பதில்:  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19  காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும்  இலங்கை அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது.

கேள்வி: கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:   திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாய்வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகரமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல.

இவர் இலங்கையின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், இலங்கை தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று. எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில் நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன். இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல. இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

கேள்வி:  எல்லா தரப்புக் குழுக்களையும் ஒருங்கிணைத்து பரந்து பட்ட ஒரு தமிழர்களுக்கான அமைப்பை உருவாக்கி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியாதா?

பதில்:   நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவதற்கு இத்தகைய நோக்கமும் உண்டு. இத் திட்டம் தொடர்பாக நாம் 16.06.2009 அன்று விடுத்த முதலாவது முன்மொழிவில், ”1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய – தமிழர் ஓர் தேசிய இனம் – வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம் – ஈழத் தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது” என்பதனை இம் முயற்சியின் அடிப்படைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் தமிழர் சமூகத்தின் மத்தியில் இயங்கி வரும் உருவாகி வரும் அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்குரிய திட்டங்களையும் அதற்குரிய கட்டமைப்பு வடிவங்களையும் உருவாக்கும் போது நீங்கள் குறிப்பிடும் வகையிலான இணைவு நடந்தேறும் என்றே நான் கருதுகிறேன்.

கேள்வி:  புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

பதில்:  மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை.

நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

கேள்வி:  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் உலங்கிலும் உள்ள தமிழர்கள் தலைமை ரீதியாக பிளவு பட்டிருக்கிறார்கள். இது பெருங்குறை இல்லையா?

பதில்: முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டம்வரை இருந்த சூழலும் தற்போதய சூழலும் முற்றிலும் வேறுபட்டது. இப் புதிய சூழலில், புலம் பெயர்ந்த நாடுகளில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டுள்ளதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை இவற்றின் குறிக்கோள் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும் மூலோபாயங்களில் தான் வித்தியாசம்.

வித்தியாசமான மூலோபாயங்களைக் கொண்டு ஒரே குறிக்கோளை நோக்கி இயங்குவது நன்மை பயக்கக்கூடியதே. இதற்கு இம் முயற்சிகளிடையே ஏதோ ஓரு வகையான ஒருங்கிணைவு இருத்தல் அவசியம். இவ் ஒருங்கிணைவு ஒரு ஒருமைப்பாடு என்ற வடிவத்தில், வேற்றுமையிலும் உடன்பாடுகாணக்கூடிய ஒரு தளத்தில் இருந்தாலே போதுமானது. இத்தகைய புரிந்துணர்வு செயற்பாடுகளுக்குள்ளால் எட்டப்படக்கூடியது என்பதனை நான் திடமாக நம்புகிறேன். தற்போதைய இடைமாறு காலகட்டத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்கள் எல்லாம் செயற்பாடு எனும் தளத்தில் இணையும்போது தெளிந்து விடும்.

கேள்வி: நாடு கடந்த தமிழீழ அரசு இன்றைய உலகச் சூழலில் உலக நாடுகளின் கவனத்தை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கவனத்தை தன்பால் ஈர்க்குமா?

பதில்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முழுக்க முழுக்க ஜனநாயக விழுமியங்களுக்கு அமைவாக அமைக்கப்படுகிறது. இதன் செயற்பாடுகளும் முழுமையாய் அந்தந்த நாடுகளின் சட்டத்திற்கமைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. ஜரோப்பிய மற்றும் மேற்குலக மக்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பவர்கள். இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இந் நாடுகளால் நிராகரிக்கமுடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இலங்கை அரசு தனது ஆரவாரத்தால் உலக நாடுகளின் கவனத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது திருப்பி விட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து  இலங்கை அரசு அச்சமடைந்துள்ளது என்பதனை இதன் ஊடாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவது, அது ஜரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி அல்லது ஏனைய உலக நாடுகளாக இருந்தாலும் சரி – இந் நாடுகளின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்கும்போதுதான் முழுமையாக வெற்றியளிக்கும்.

தற்போது இலங்கை அரசின் போக்கில் ஜரோப்பிய நாடுகள் உள்ளடங்கலான மேற்குலகம் அதிர்ப்தியடைந்திருப்பதனை உணரமுடிகிறது. இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பக்குத் துணைபுரியக்கூடிய சாதகமான ஒரு அம்சமே.

கேள்வி:  உலகின் எந்த ஒரு நாடுமே ஒரு இன விடுதலைப் போராட்டம் என்கிற அளவில் கூட ஈழ மக்களின் இறையாண்மை உணர்வுகளை புரிந்து கொள்ள வில்லையே?

பதில்:  இங்கு நாடுகள் எனும்போது அரசுகளையும் அந் நாட்டு மக்களையும் நாம் பிரித்து பார்த்தல் நல்லது. ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கு போராடும் போது அவ் இறையாண்மையின் அடிப்படையில் ஈழத் தமிழர் தேசம் தனிஅரசினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குரிய சூத்திரம் அரசுகளைப் பொறுத்த வகையில் நலன்கள் என்ற மந்திரக்கோலில்தான் தங்கியுள்ளது.

அதற்குரிய சமன்பாடு மிக எளிதானது. இலங்கைத்தீவு ஒரு நாடாக இருப்பதா அல்லது இரு நாடுகளாக இருப்பதா தமது நலன்களுக்கு நல்லது என்ற கணக்கிலிருந்துதான் அரசுகளின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இதனால் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மை உணர்வினை உலக நாடுகள் புரிந்து கொள்ள முயலவில்லை. இவ் விடயத்தில் இந்தியாவின் நிலையும் உலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமாகவிருந்திருக்கிறது.

ஆனால் மக்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் தேசம் தனது இறையாண்மையினை பிரயோகிப்பதற்கான நியாயப்பாடுகள் உரியமுறையில் அவர்களைச் சென்றடையும் போது எமது கோரிக்கையின் நியாயத்தன்மையினைப் புரிந்து கொளகிறார்கள். ஆதரவினைத் தருகிறார்கள்.

கேள்வி:  வன்னி மீதான போரில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையானது. தமிழர்களுக்கு எதிரான இந்தியத் தலையீடு தமிழகத்திலும் புலத்திலும் இந்தியாவின் மீது கடும் விசனத்தை உண்டு பண்ணியிருக்கும் நிலையில் இந்தியா உங்களின் கோரிக்கைக்காக உதவும் என்று நம்புகிறீர்களா?

பதில்:  ஈழத் தமிழர் தேசத்திற்கு இந்திய அரசு உதவுவது என்பது அதன் நலன்களோடு தொடர்புபட்டது. முற்றி வரும் உலக ஒழுங்கில் இந்தியாவின் நலன்களும் ஈழத் தமிழர் தேசத்தின் நலன்களும் ஒரே கோட்டில் சந்திப்பதற்கான வாய்ப்பக்கள் உண்டு எனறே நாம் கருதுகிறோம். இலங்கை அரசினைத் தனது செல்வாக்கிற்கு உட்படுத்தி வைத்திருத்தல் தனது பிராந்திய மற்றும் ப+கோள நலன்களுக்கு அவசியம் என இந்தியா கருதுகிறது. அதற்காக  இலங்கை அரசுக்கு உதவியளித்து – அதனைத் தனது செல்வாக்கிற்குட்படுத்தி வைத்திருக்கும் கொள்கையை தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தான் வன்னிப்போரிலும் எதிரொலித்தது.

இலங்கைத்தீவினை சீனமயப்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசு தற்போது ஈடுபட்டிருப்பதானது தற்செயலானதல்ல. அல்லது உதவி செய்யும் சீனாவின் விருப்பத்திற்கிணங்க மட்டும் நடைபெறுமொன்றுமல்ல. இந்தியாவின் தன் மீதான ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை அரசு தனது நலனின் அடிப்படையிலும்தான் சீனாவுக்குக் கதவு திறந்து விட்டுள்ளது. காலவோட்டத்தில் சீனா இந்தியாவின் செல்வாக்கினையும் மீறி இலங்கைத் தீவினை விழுங்கத்தான் முயலும். இவ்விடத்திலிருந்து இந்திய நலன்களும் ஈழத் தமிழர் நலன்களும் இணையக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

கேள்வி:  இன்னமும் முகாம்களுக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் அடைபட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் வதை முகாம்களில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களின் உயிர் பாதுகாப்பு… விடுதலை குறித்தெல்லாம் முன்னெடுப்புகளை உங்களால் செய்ய முடியாதா?

பதில்:    இவை குறித்து தற்போது எமது மதியுரைக்குழு உறுப்பினர்கள் தம்மால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் போது இவ் அரசாங்கம் இவை குறித்த நடவடிக்கைக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படும் என்பது எமது நம்பிக்கை.

புலத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அஞ்சி நாம் எமது வெளிநாட்டுப் பயணங்களை கைவிட மாட்டோம் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கிறதே?இது பற்றி என்ன நினைகிறீர்கள்?
சிறிலங்கா அரசு இவ்வாறு கூறுவதே புலம் பெயர் தமிழ் மக்கள் தொடர்பான அச்சம் அவர்களுக்கு உண்டு என்பதனை வெளிப்படுத்துகிறது. மேலும், புலம் பெயர் தமிழ் மக்கள் முக்கியமான அரசியல் சக்தியாக பரிமாணம் அடைந்துள்ளனர் என்பதனையும் இது காட்டுகிறது.

கேள்வி:  புலத்து மக்கள் போராட்டங்களை கைவிட்டு விட்டார்கள். மே மாதம் கடும் கொந்தளிப்போடு வீதிகளுக்கு வந்தவர்கள் இன்று மௌனமாகி விட்டார்கள். இந்நிலைக்கு நிலவும் குழுச்சண்டைகளும் ஒரு காரணம் இல்லையா?

பதில்:  மே மாத நடுப்பகுதி வரை நாளாந்தம் பெருந்தொகையான மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டபோது – உலகின் மனச்சாட்சியினைத் தட்டியெழுப்பி யுத்தநிறுத்தத்தையும் அதைத் தெடர்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டி – புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாடு மற்றும் உலகப்பரப்பெங்கும் உள்ள தமிழ் மக்களும் வீதியில் இறங்கிப் பெரும் எழுச்சியுடன் போராட்டங்களை நடாத்தினார்கள். இருந்த போதும் உலகம் எமக்காக அருகில் வரவில்லை. நம் கண் முன்னாலேயே நடந்த இனப்படுகொலையினை தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. மே 2009 க்குப் பின்னரான காலம் நான் முன்னர் குறிப்பிட்டவாறு ஒரு இடைமாறு காலகட்டம். வீதியில் இறங்கிப் போராட்டங்கள் நடாத்தவதனை விட உலகினை எம்மை நோக்கி அசையச் செய்யதற்காகச் செயற்படக்கூடிய கட்டமைப்புக்களை உருவாக்குவது குறித்துக் கூடுதல் கவனங்கள் செலுத்தப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதுவும் இத்தகைய ஒரு முயற்சியே.

கேள்வி:  இனக்கொலை, தடுப்பு முகாம்களில் மக்கள், அரசியல் கைதிகள், இதற்கெல்லாம் என்ன வேலைத் திட்டம் உங்களிடம் இருகிறது?

பதில்:  இத்தகைய விடயங்களை கையாள்வது குறித்து தொடர்பான சில விபரங்கள் மதியுரைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை குறித்த விரிவான திட்டங்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டவுடன் வகுத்துச் செய்யப்படவேண்டியவை.

கேள்வி:  அமெரிக்க நீதிமன்றத்தில் நீங்கள் வாதாடும் பயங்கரவாதம் தொடர்பான வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

பதில்:  அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்புக்களாக பிரகனடப்படுத்தப்பட்ட அமைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒன்றாகும். அமெரிக்கச் சட்டப்படி இவ் அமைப்புக்களுக்கு பொருண்மிய உதவி வழங்குதல் குற்றமாகும். ஆயினும் இவ் அமைப்புக்களின் அரசியல் கொள்கைகளுக்கு சுயாதீனமான முறையில் ஆதரவு வழங்குவது சட்டத்திற்கு ஏற்புடையது. விளக்கமாக கூறுவதாயின், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் குறிக்கோளை, அரசியல் வேலைத்திட்டத்தை சுயாதீனமான முறையில் எடுத்துச் செல்லலாம், அமெரிக்க உச்ச நீதி மன்றத்தில் எடுத்துக்கொண்ட சாரம் என்னவெனில், ஒரு நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம் தொடர்பாக அவர்களுடன் இணைந்து செயல்படும் உரிமையை மறுப்பது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரத்திற்கு முரணானது என்பதாகும். உச்ச நீதிமன்றதின் தீர்ப்பு ஜுன் மாதத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கேள்வி: புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்றீர்களே? அவர்கள் ஈழப் போராட்டத்தில் அரசியல் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா?

பதில்: ’புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது’ நம் மத்தியில் உள்ள பழமொழி அல்லவா!

Nessun commento:

Posta un commento