martedì 15 giugno 2010

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். - பாகம்1

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன்.

vaddu “இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக்கொண்டுசென்ற தமிழர்களின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள். 

முன்னோட்டங்கள்…

ஒரு இனத்தின் வரலாற்றையே அதிரடியாய் மாற்றிய பெருமை சிங்கள அரசையே சார்ந்து நிற்கின்றது… ஒரு இனத்தையே அழிவு கொடுத்து அடியோடு இடிந்து விட்டநிலையில் தமிழ்ச்சமுகம் ஏங்கிநிற்கின்றது. தமிழ் மொழி எங்கெல்லாம் பேசப்படுகின்றதோ அங்கெல்லாம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், தீக்களிப்புக்கள் என்றெல்லாம் எமது ஆதங்கங்களைக்காட்டியும் இழப்புக்கள் அதிகரித்ததேஒழிய நிறுத்துப்படவும்இல்லை நிரந்தரத்தீர்வும் வரவில்லை… !!!

தமிழர்களின் வாக்குகளிலும் முன்னால் புலிகளின் பிரபல்யத்திலும் தம்மை இலங்கை அரசில் அங்கமாக்கிக்கொண்டவர்கள், இப்போர் ஓய்ந்தும்கூட புலிகளின் அதாவது தமிழர்களின் கோரிக்கைகளுக்கு தம்குரலைக்கொடுத்தார்களா என்றால், அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்த பேச்சுவார்த்தைகள்… அடுத்த பேச்சுக்கள்… இனிவரப்போகும் பேச்சுக்கள்… என்று தேர்தல்களங்கள் கடந்து கொண்டே போகின்றனவொழிய “தீர்வு” அண்மித்ததாகத்தெரியவில்லை.

கூட்டமைப்பின் போக்குக்கள் ஒருவகையாக அமையும் போது,  மற்றைய கட்சிகளின் தமிழ் உறுப்பினர்களின் போக்கு அதற்கு விவாதங்கொடுப்பதோடு நின்று விடுகின்றது. உதாரணமாக,   தற்போதைய அரசியல்வாதிகளும் முன்னாள் போராளிகளுமான அமைச்சர்கள் (பிரதி அமைச்சர்கள் உட்பட) கூட்டமைப்பின் தவறே இன்றைய விடுதலைப்புலிகளின் தோல்வி மற்றும் தமிழர்களின் நிலை… என்ற கூற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்ற போதிலும் தற்போது தமிழர்களுக்கு வேண்டிய எந்த செயற்பாட்டில் அவர்கள் முன்நிற்கின்றார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை!!!

இந்த போர்ச்சம்பவங்களை சாதகமாக்கி இந்தியா தனக்குத்தேவையான ஒப்பந்தங்களை இலங்கையின்பால் செய்து முடித்திருக்கின்றது என்பதே உண்மைகள். இந்தியாவின் றோ பிரிவினர் ஒருபுறம் தமிழ் அமைப்புக்களை ஆக்கிரமிப்புச்செய்ய அரசியல் போக்கில் அரசாங்கம் மறுமுணையில் ஆக்கிரமிப்புச் செய்துவருகின்றது. றோபிரிவினர் இன்றுமட்டுமல்ல முன்னைய காலங்களில் இருந்தே பல தமிழ் அமைப்புக்களை பிளவுபடுத்திக் கூத்துப்பார்த்தது என்றால், இப்போதும் அதே போக்கில் தமக்கு ஏற்ப சாதகப்போக்குடையோரை இனங்கண்டு அவர்கள் சுகபோகத்திற்காக தமிழர்களை விலைபோக வைத்துள்ளனர். இதில் அவர்களை எப்படி குறைசொல்வது…???? கேட்கிற நமக்கெல்லாவா அறிவு வேலை செய்ய வேண்டும். தமிழர்களின் அரசியல் சாணக்கியம் என்று கூடசந்தேகப்பட முடியவில்லையே எமது தமிழர்களின்போக்கு…

இந்தியாவின் போக்கில் அடிப்படைத்திட்டமாக விம்மி நிற்பது எதவென்றால், இலங்கையில் காணப்படுகின்ற “கனிப்பொருள்” எச்சங்களால் இலங்கை ஒருவேளை நிதியில் எதிர்காலத்தில் அதிக செல்வாக்குச் செலுத்தக்கூடுமோ என்ற ஐயப்பாட்டில் இப்போதிருந்தே சீனாவும், இந்தியாவும் இன்னும் சில நாடுகளும் கங்கணம் கட்டிக்கொள்கின்றன. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் முன்னைய காலங்களில் இருந்தே ஆகாதபோதிலும் இலங்கையினை மையமாகவைத்து ஒரு உட்குத்து சமரசம் இணக்கப்பாடு தெரிவது புலனாகின்றது. எனினும் காலங்காலமாக அமேரிக்காவின் இராஜதந்திர நரர்வுகளால் சிதைவுண்ட தேசங்களின் மத்தியில் திடமாக நின்றுவந்த அமேரிக்காவின் உளவுத்துறையும் சரி, அரசியல் போக்குகளும் சரி தற்போது சற்று சிந்திக்கத் தோடங்கியுள்ளது என்றால் அது நடைமுறை உண்மையே!!!

இத்தனைக்கும் ஒரு இனத்தையே "அரசாங்கம்"  அழித்தும், வாளாவிருக்கும் உலகத்தின் கண்களில் உள்ள திரைதான் என்ன??? விடுதலைப்புலிகளின் போக்கில், உலகத்தின் பால் போதிய விளக்கமின்மையும் தமிழர்களிடையே உள்ள ஒற்றுமையின்மையும் என்றால் அது எமது தேசியத்தையே கறைப்படுத்திவிடுமல்லவா?இதுதவிர பல விளக்கங்கள் உலகத்திற்கு எடுத்துரைக்க, எமது தமிழ்த் தலைமைத் துவங்களுக்குத் தேவைப்படுகின்றது.

இலங்கை அரசானது கடந்த காலப்போரின் ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் மக்கள்மட்டுமே புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்ட போதிலும், இல்லை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் போரில் அகப்பட்டுள்ளோர் என்பதனைத் தெரிவித்திருந்தமை தொடர்பாக யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அரசானது தனது கட்டுப்பாட்டில்   உள்ள மக்கள் தொகையினை அறிந்து கௌ;ளமுடியாது இருந்தது என்ற பொய்ப்பிரசாரத்தை செய்யமுடியாது. காரணம் பிறப்பில் இருந்த அனைவரின் பதிவும் அதற்கொரு ஆதாரம். இந்தவகையில், அரசு தன்னால் ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் அழிவிற்கு, தமிழர்களுக்குமட்டுமே பூதக்கண்ணாடிபோன்று தோற்றத்தைக்காட்டுகின்றது என்றும் மாறாக உலகத்திற்கு குறைக்கப்பட்ட தொகையினையும் தமது அதிகாரத்தைப்பயன்படுத்தி வெளிப்படுத்தி வருகின்றது. இவ்வாறான வெளிப்பாட்டை காட்ட எந்த தமிழ் அதிகாரிகளும் சர்வதேசத்தில் வெளிக்கொணரப்படவில்லையே???

இதன் காரணம் எதுவாகில், இலங்கை அரசால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் தொகையினை மிகச்சொற்பமகக்குவதற்காதகவே, ஆரம்பத்தில் இருந்து குறைந்த தொகையினரே புலிகளின் கட்டுப்பாட்டில் இருபக்பதாக அரசுசார்பில் தெரிவித்தனர். அதன் காரணம் இன்று எமது இரத்தசொந்தங்கள் கிழிபட்டும், மானங்கள் பறிக்கப்பட்டும், வயோதிபர்கள் கர்ப்பிணிப்பெண்கள் என்ற வேறுபாடின்றி மிகக்கொடுரமான ஆயுதங்களாலும், நச்சுவாயுக்களாலும், சிங்களக்காடையராலும் அழிக்கப்பட்டனர் என்பதனை வெளியுலகு தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே போர் உச்ச கட்டம் அடைந்தபோது, பொது அமைப்புக்களை அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது….

இதுபோன்ற விடயங்களை மட்டுமன்றி தமிழர்களின் ஆரம்பகாலத்தையும் சிங்களவர்களின் ஆரம்பகாலத்தை வெளிக்காட்டுவதோடு, திராவிட இனத்திற்கு ஆரிய இனத்தால் ஏற்பட்ட தாக்கங்களையும் வெளிக்காட்டவேண்டிய அல்லது மீட்டுக்கொள்ளவேண்டிய சந்தர்ப்பத்தில் நாம் நிற்கின்றோம். 1972ன் காலப்பகுதியில் இருந்தே தமிழ் இனம் ஒன்றின் விம்பத்தை புலிகளின் பெயரால் தீவிரவாத செயற்பாடுகளை ஆதாரங்காட்டி வரலாறுகளாக்க இலங்கை அரசு முயற்சிக்கின்றது.

தமிழ் இலக்கியப் போக்கில் இன்றைய நிலையினை எடுத்துக்கொண்டால், எதிர்காலச்சமூகம் ஏராழ இலக்கிய நூல்களை இழந்துகொண்டிருக்கிறதென்பது அப்பட்டமான உண்மை. வாசிப்புத்திறன், எழுத்தார்வம், விமர்சனப்போக்கு என்பன ஒரு குறிப்பிட்ட நபருக்கே உரியதொன்றாக எண்ணக்கூடிய அளவுக்கு உலகம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கணனியின் வளர்ச்சியென்பது, கண்களுக்கு, மற்றும் கைகளுக்கு எட்டாத தொலைவில் பறந்து சென்ற வேகமதிகரித்துப் பாய்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இது வாழ்க்கையின் வேகத்தை அதிகரித்த அளவுக்கு, அறிவின் வேகத்தை அதிகரிக்கவில்லையென்பது அணைக்க முடியாத வெளிச்சம்.

“பலரின் அறியாமையே ஒருவருக்கு மாபெரும் அறிவாகிறது.”
“பலரின் தூக்கத்திலேயே ஒருவரின் விழிப்புப் பலன்கொடுக்கிறது.”

இது நல்லிலக்கியம், அது இலக்கியமன்று, என்று பாகுபடுத்த நீ யார்? அதனை, இன்றைய நீயல்ல, நாளைய வரலாறு தீர்மானிக்கட்டும். இன்றைய ஏராளம் எழுத்துக்களின் தொகுப்பு, இன்றைய உண்மை நிகழ்வுகளை, நாளை மீள்பரிசீலனை செய்ய கைகொடுக்கும்.

ஆதிக்கச்சார்புடைய எழுத்துக்களின் அம்பலம் அவ்வப்போது வெளிவருவதில்லையே!! அவை காலந்தாழ்த்தித் தலைகுனியும். ஆதிக்கச்சார்பற்ற உண்மைகள் அமைதியாகவே தலைநிமிரும்.

அன்பனே, நாளை வாசிக்கப்படும் வரலாற்றில், நீயும் ஒரு பகுதி என்பதனை மறந்து விடாதே. எழுத்துரிமை எழுத்தாளருக்குமட்டும் உரியதென்று ஒதுக்கப்படும் தவறான கருத்திலிருந்து உன்னை விலக்குகிறேன். "உன் சிறு கடிதங்கூட நாளைய வரலாற்றில் மாபெரும் இடத்தைப் பிடிக்கலாம்", இன்று யாரறிவார்?!

இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் நின்று பார்க்கும் போது, கூச்சப்பட்டுத், தலைகுனிந்து மனம் பொருமக்கூடியதாகவே இருக்கிறது. மனிதன் ஏன்வாழுகிறான் என்று எண்ணக்கூடிய நிலையில் எவரும் இல்லை. சேவை அமைப்புக்களும் சரி, அரச அமைப்புக்களும்சரி, நிதி என்ற மையப்பொருளிலேயே இயங்குகின்றது. ஒரு தனிப்பட்ட உழைப்பாளி தன் சாதாரண தனி வருமானத்தைக்கொண்டு, வாழ்க்கை நடத்துவதற்கு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டுக் கண்ணீர் விடவேண்டியிருக்கிறான்; எனவே, அவன் தன் சாதாரண வருமானத்திலும் பார்க்க வேறு துணைவருமான வழியினைத்தேட முயற்சிக்கிறான். அல்லது, சாதாரண வருமானத்தைக்கொண்டு வாழ்க்கை நடத்தமுடியாத காரணத்திற்கு எதிராக, தன்போன்ற பலரைச் சேர்த்துக்கொண்டு கோசம் போடமுயல்கிறான். அந்தமுயற்சியினை சமாளிக்கமுடியாத அமைப்புக்கள் அதனைத் தடைசெய்ய முயலும்போது, அந்த நபர்களின் செயற்பாடு ஒரு அமைப்பாகிறது. அது மேலும் மேலும் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்களால் (அரசால், பொதுவமைப்புகளால், சமய அமைப்புக்களால்) எதிர்க்கப்படும்போது, அது தீவிரவாதம் என்று இவ்வமைப்புக்களால் பெயர் சூட்டப்படுகிறது; அல்லது அவ்வமைப்பை அழிப்பதற்கு வகைதேடப்படுகிறது. இதற்குமாறாக, அவர்களின் கோசத்திற்கு ஏற்றவாறு நிலைமையினை மாற்றியமைக்க எந்த அமைப்பும் முன்வருவதில்லை; அப்படி முன்வந்தாலும் அதற்கு ஏராளமான நடைமுறைகளை ஏற்படுத்தி ஒருவருக்கு சலிப்பேற்படுமட்டும் ஆட்டிப்படைத்து அந்நபரைப் பிழிந்தெடுத்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒரு சிறு விடையத்திற்கு பல மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலோ இழுத்தடித்து அவர் வாலிபத்தைக் கரைத்துவிடுகிறது.

கல்விமுறையினை எடுத்துக்கொள்ளுங்கள், அதுகூட கேலிக்கிடமாகத்தான் தோன்றுகிறது. குறிப்பிட்ட ஒருநாட்டிலல்ல, பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான் நிலைமை இருக்கிறது. விழுந்து விழுந்து ஒருமானவன் இரவுபகலாக கல்விகற்கிறான் அதுவும், பத்துவருடக்கல்வியின்பின் பயத்தோடு ஒரு பரிட்சை, அதில் பயத்தின்காரணமாகவோ அல்லது பிற மனம், மற்றும் உடல் சம்மந்தமான பாதிப்பாலோ அவன் அப்பரிட்சையில் பின்னடைவானாகில், அவனின் பத்துவருடமும் பாழாக்கப்பட்டதாக சமுகம் கருதிக்கொள்கிறது. ஒருவருடைய கல்வித்திறமையினை பரிட்சைமூலம்கணிப்பிடும் முட்டாள்த்தனத்திற்குப் பட்டதாரி என்று பெயர். ஒருவரின் அறிவை எடைபோட எவருக்குத் தகுதியுண்டு என்று எனக்குப்புரியவில்லை. உலகத்தில் யாரும் யாருக்கும் அறிவூட்டவோ அல்லது யாருடைய அறிவையும் அறிவிழக்கவோ செய்யமுடியாது. மாறாக, ஒருவருக்குள் இருக்கும் அறிவினை வெளிக்காட்டவோ அல்லது உள்ளடக்கவோ மட்டுமே இன்னொருவரால் முடியும். எந்த ஆசிரியனும் மாணவருக்கு அறிவூட்டுவதில்லை, மாணவனுக்குள் இருக்கும் அறிவினை தூசிதட்டவே முற்படுகின்றார். நாற்பது மணவர்  இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் சிறப்புத்தேர்ச்சி அடைகின்றார்கள் என்றால், அது யாருடைய தப்பு?!  

நாற்பது மாணவர்  இருக்கும் வகுப்பறையில் நான்கு மாணவர் தேர்ச்சியே அடையவில்லை என்றால் அது யாருடைய தப்பு!? விஞ்ஞான அறிவில் ஒருவன் தன்சிந்தனையினைச் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு கணித அறிவைப் புகட்டித்திணிப்பது எந்தவகையில் ஏற்றுக்கொள்ளமுடியும். தாயின் வற்புறுத்தல், தந்தையின் வற்புறுத்தல், சகோதரத்தின் வற்புறுத்தல், ஆசிரியரின் வற்புறுத்தல், நண்பனின் வற்புறுத்தல்… இவைபோன்ற ஏராளம் பாதிப்புக்கள் ஒருவனுடைய தன்நிலையினை மாற்றிவிடுகிறது.
சுயமாகச்சிந்திக்கும் மனிதர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். இதன்காரணம் தன்சுயநிலையில் ஆசிரியர் ஆகவேண்டிய ஒருவர், வற்புறுத்தலின் தாக்கத்தால் அவன் அதிகாரியாகிவிட்டான்; இதனால் தற்போது அவன் வீத அடிப்படையில் திறமைகுறைந்தவனாகக் காணப்படலாம் அல்லவா? திறமை குறைந்தவன் என்று நான்சுட்டிக்காட்டுவதன் கருத்தாவது: அதிகாரியாக இருப்பதிலும் பார்க்க ஆசிரியராக இருந்தால் அவன் திறமையின் வீதாசாரம் ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என்று காட்டவே.

புவியியலில் மாவட்டரீதியில் அதிவிசேட உயர் பெறுபேறினைப்பெற்ற சிலரில் நானுமொருத்தன்; ஆனால், நான் இப்போது செய்யும் வேலைக்கும் அந்த பெறுபேற்றிற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. அத்தோடு அனுபவரீதியில் இப்போது அறிந்து கொண்ட கல்விமுறையே எனக்குக்கைகொடுக்கிறது. நான் எதற்காக ஏராளம் வருடங்களைப் பாழாக்கிவிட்டேன் என்று சலித்துக் கொள்கிறேன்னிப்போது.

என்னைப் பொறுத்தவரையில் ஒருகுறிப்பிட்ட கற்கை காலத்தின்பின்னர் ஒவ்வொருவரும் தொழில் அடிப்படையில் பகுக்கப்படவேண்டும், பகுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவில் தொழில் பகிர்ந்தளிக்கப் படவேண்டும். அது மணிக்கணக்கில் கணிக்கப்படும் பரிட்சைமூலமல்ல, நாட்கணக்கில் எடுக்கப்படும் பயிற்சிக்கணிப்புமூலம் இடம்பெறவேண்டும். 10 நபரை வேலைக்கு எடுப்பதற்காக நுற்றுக்கணக்காணவரை எதற்காக வருடக்கணக்கில் அலக்களிக்கவேண்டும்?

அடிப்படையில் இருந்து ஏராளமான நடைமுறைகள் கட்டுக்கட்டாகப் படிப்படியாக மாற்றப்படவேண்டும். அதற்கு அரச நடைமுறைகளையோ அல்லது அமைப்புக்களின் நடைமுறைகளையோ எதிர்பார்த்து ஏமார்ந்து போவதைக்காட்டிலும், ஒவ்வொருதனி நபரிலும் இருந்து இந்த ஒளிப்பிளம்புகள் புறப்பட வேண்டும். ஒவ்வொருவிடையத்திற்கும் சமுகத்திலிருந்து ஒவ்வொரு தலையான ஒருவரை இனி எதிர்பார்க்க முடியாது; மதத்திற்காக ஒரு இயேசுகிறீஸ்துவை, அரசியலுக்காக ஒரு லெனினை, சேவைக்காக ஒரு அன்னைத் திரேசாவை, கொறில்லா முறைக்காக ஒரு சேகுவெராவை, தத்துவத்திற்கு ஒரு சோக்றடீசை, படைகளைத் தாங்குவதற்கு ஒரு ஜோன்ஒவ்ஆர்க்கை, வானியல் கண்டுபிடிப்புக்கு ஒரு கலிலேயோ கலிலேயியை, அகிம்சைக்கு ஒரு காந்தியை, கணிதமேதைக்கு ஒரு பித்தாகொராவை… இனியாரும் எதிர்பார்க்கத் தேவை இருக்கக்கூடாது.

இப்பேற்பட்ட ஆதங்கங்கள் புத்தம் புதிதாய் அருகனிடம் இருந்து வந்தகருத்துக்களல்ல, காலகாலமாக வந்திருக்கலாம், தப்பில்லை; இதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவரவேண்டிய நிர்ப்பந்தமும், நடைமுறைப் படுத்தவேண்டிய கட்டாயத்திலும் நாம் அனைவரும் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எனவேதான், என்னை எழுதத்தூண்டும் எண்ணங்களிலெல்லாம், மற்ற மனிதர்களின் ஆதங்க எண்ணங்கள் பிரதிபலிக்கின்றனபோலும்.

இப்பேற்பட்ட ஆதங்கங்களோடு உட்செல்ல விரும்புகிறேன், அவையனைத்தும் உங்கள் விம்பங்கள் காட்டும் கண்ணாடியே, வாருங்கள்…!  

புலிகளின் செயற்பாடுகள் தீவிரவாதமல்ல, அது ஒரு இனத்தின் உரிமைப்போர் என்பதனை நாம்தான் வரலாறாக்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல் தாய்மண்ணிற்காகவும் எமது தேசியத்திற்காகவும் தம்முயிரைக் காணிக்கையாக்கிய மழலைகளை காலப்போக்கில் எமது தமிழர்களே மறந்துபோகும் துர்ப்பாதக்கிய நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுவோம். தொடரும்

Nessun commento:

Posta un commento